மேட்டூர், பிப்.17: மேச்சேரி அருகே, ஜல்லி மற்றும் எம்.சாண்ட் எடுத்து சென்ற டிப்பர் லாரி மோதியதில் வாலிபர் பலியானார். இதை கண்டித்து, கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தர்மபுரி மாவட்டம் கம்மம்பட்டியை சேர்ந்த விஸ்வநாதன் மகன் பாலகிருஷ்ணன். இவரும், இவரது உறவினர் அஜீத்தும், நேற்று காலை கம்மம்பட்டியிலிருந்து வெள்ளாறுக்கு டூவீலரில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது வெள்ளார்பக்கம் இருந்து அனுமதி பெறாமல் எம்.சாண்ட் மணல் ஏற்றி வந்த டிப்பர் லாரி அதிவேகமாக வந்து, டூவீலர் மீது மோதியது. இந்த விபத்தில் பாலகிருஷ்ணன், அஜீத் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். அங்கிருந்தவர்கள் இருவரையும் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தகவலின் பேரில் அங்கு திரண்ட பொதுமக்கள், சேலம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கபட்டது. தகவல் அறிந்த மேச்சேரி போலீசார், விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அதில் அனுமதியின்றி செயல்படும் எம்.சாண்ட் குவாரிகள், டிப்பர் லாரி உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி கூறியதன் பேரில் மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
போலீசார் விசாரணையில், அனுமதி இல்லாமல் கடத்தப்படும் ஜல்லிக்கற்கள் முக்கிய சாலை வழியாக சென்றால் வருவாய்த்துறை, காவல்துறையினரால் பிடிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என்பதால் கிராமத்து சாலை வழியாக பென்னாகரத்திற்கு கடத்தப்படுவது தெரிய வந்தது. இதேபோல், நேற்று காலை கொளத்தூர் அருகே ஏரிக்காடு எம்ஜிஆர் நகர் அருகே வேகமாக சென்ற மினி டிப்பர் லாரி, எதிரே வந்த டூவீலர் மீது மோதியதில், வெடிக்காரனூரை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் அரவிந்த்குமார் (20) என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும், சின்னமேட்டூரை சேர்ந்த தங்கராஜ் மகன் தினேஷ்குமார், பலத்த காயத்துடன் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக கொளத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.